Wednesday, March 18, 2015
� �� �ு � �� �� �ை� �ு� ் � �� �� �்� �ு � �ு� �� �்� �ை� �� �ு� ்
அந்த விவசாயி குட்டி யானையின் உணவுகளைப் பற்றி யானை வளர்க்கும் தனது நண்பர் ஒருவரிடம் கேட்டு அறிந்து கொண்டு வருகிறார், பிறகு அந்த யானையை அவர்களே வளர்ப்பது என்று முடிவு செய்கிறார்கள், அந்த யானையின் கண்களில் அவ்வப்போது வழியும் கண்ணீரை அந்தக் குழந்தைகள் துடைக்கிறார்கள், அந்தக் குட்டி யானையும் அவர்களோடு அன்போடு பழகத் துவங்குகிறது, கொஞ்சம் கொஞ்சமாக அந்த யானையின் கண்களில் கண்ணீர் வருவது நிறுத்தப்படுகிறது, யானைகள் அழுகுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால், அந்தக் குட்டி யானையின் சின்னக் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்பதைப் பார்க்கையில் யானைகள் மனிதர்களைப் போலவே அன்பில் கட்டுண்டு கிடப்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் குழந்தைகள் இருவரும் அந்த யானையோடு பொழுதெல்லாம் விளையாடுகிறார்கள், அவர்கள் ஒரு மலைச்சரிவான கிராமத்தில் வசிக்கிறார்கள், அவர்களின் வீடு வைக்கோல் வைத்து வேயப்பட்ட பசுமை நிறைந்த ஒரு சரிவில் இருக்கிறது, அந்தச் சரிவில் யானை எந்தச் சிக்கலும் இல்லாமல் ஏறி விடுகிறது, குழந்தைகளுக்கு சரிவில் ஏறுவது சிரமமாக இருக்கிறது, பெரியவள், சின்னப் பெண்ணை யானையின் வாலைப் பிடித்துக் கொண்டு ஏறுமாறு சொல்கிறாள், அந்த யானைக்குட்டி தனது தும்பிக்கையை நீட்டி அந்தக் குட்டிப் பெண்ணை அழைக்கிறது, பிறகு மெல்ல தனது தும்பிக்கையைச் சுழற்றி அவளை அலாக்காகத் தூக்கி சமதளத்தில் விடுகிறது.
சின்னக் குழந்தை ஒரு முறை காய்ச்சலில் படுத்து விடுகிறாள், அந்த வீட்டின் தாய் அவளுக்கு பத்துப் போட்டு, சில கஷாய மருந்துகளைக் கொடுக்கிறாள், அப்போது அந்த யானை குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிகிறது, தனது தாயைப் பிரிந்தது போலவே அதன் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது, உலகின் அத்தனை திரைப்படங்களிலும் காணக் கிடைக்காத ஒரு விதமான கடும் நெருக்கடியை அந்தக் காட்சி வழங்கியது, உடைந்து என் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கின்றன, நான் ஒரு சிறு குழந்தையைப் போலவே அன்று அழுதேன், அவள் குணமான பின்பு அவளை அழைத்துக் கொண்டு அந்த யானை காட்டுக்குள் செல்கிறது, சுற்றிக் காட்டுகிறது, அந்தச் சின்னப் பெண்ணும் அப்போது வளர்ந்து கொஞ்சம் பெரியவளாகிறாள், யானை இந்தக் குழந்தைகள் இருவரையும் சுமந்து கொண்டு இந்தோனேஷியா மலைச் சரிவுகளில் சுற்றித் திரிகிறது. மலைக் காடுகள், தெளிந்த நீரால் நிரம்பி ஓடும் ஆறு வீட்டுக்கருகில் பாய்ந்து ஓடுவது, மேகங்கள் அந்த வீட்டின் வைக்கோல் கூரைகளை உரசிக் கொண்டு திரிவது என்று ஒரு அற்புதமான சூழல் நிலவும் அந்த நிலப்பரப்பில் இயற்கையோடு ஒட்டி உறவாடும் அந்தக் குடும்பம், அந்த யானையையும் சேர்த்துக் கொண்ட பிறகு இன்னும் அழகான குடும்பமாக காட்சியாக்கப்பட்டிருக்கும்.
அப்போது ஒரு இளம் காட்டு இலாகா அதிகாரி இவர்களின் வீட்டுக்கு வருகிறான், யானையைப் பார்க்க வேண்டும் என்று வருகிற அவனது கண்களில் கொஞ்சம் கனிவு இருப்பதை அவன் அந்த யானையை வருடிக் கொடுப்பதில் இருந்து கண்டு கொள்ள முடிகிறது, மூத்த பெண்ணுக்கும் அந்த இளம் அதிகாரிக்கும் இடையில் ஒரு சிறு புன்னகை மலர்கிறது, அந்தப் புன்னகையின் வெளிச்சத்தில் யானையின் நிழல் படிகிறது, இந்தக் குழந்தைகள் இருவரும் அந்த யானையின் மீது கொண்டிருக்கும் அன்பைக் கண்டு வியக்கிறான் அந்த இளம் அதிகாரி, அவனும் கூட அந்த யானையை நேசிக்கத் துவங்குகிறான், மூத்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான் அந்த இளம் இந்தோனேஷியா வாலிபன், பிறிதொரு நாளில் அந்த இளம் அதிகாரி தன்னுடைய குடும்பத்தினரோடு விவசாயியின் வீட்டுக்கு வருகிறான், வழக்கமான சடங்குகள் உடன் கூடிய ஒரு பெண் பார்க்கும் நிகழ்வாக அந்தக் காட்சி இருக்கிறது, அந்த நிகழ்வில் யானையும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது, சின்னப் பெண் அந்த யானையை வந்திருப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்கிறாள், அவர்களை வரவேற்பது போல அந்த யானை துதிக் கையைத் தூக்கிப் பிளிர்கிறது. படம் முடிகிறது.
மனித வாழ்க்கையில் உறவுகளின் தாக்கம், உயிர் வாழ்க்கையின் சமன்பாடுகள், இயற்கையின் அழகு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையில் இருக்கும் அளப்பரிய மகிழ்ச்சி, ஒரு தந்தையின் கடமைகள், அவனது மனநிலை, குழந்தைகளின் மனநிலை, காதல், இயற்கை அரண்களின் மீதான அரசுகளின் அலட்சியப் போக்கு என்று எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கும் அந்தப் படத்தைப் பார்த்து முடித்த கையோடு (கண்ணோடு) இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையான ஒரு தமிழ்த் திரைப்படம் கண்ணில் பட்டு அந்தப் படத்தின் வலிமையை வேறு இன்னும் தனியாக உணர்த்தியது துணைக் கதை.
யானைகளுக்கு மதம் பிடிக்குமே தவிர மதங்களைப் பிடிக்காது, ஆயினும் நாம் அவற்றுக்கு பட்டையும் நாமமும் சார்த்தி அவற்றைத் தெருக்களில் பிச்சை எடுக்க வைக்கிறோம், யானைகள் எந்த உயிர்களையும் தொல்லை செய்வதில்லை, தங்கள் குடும்பங்களோடு அவை அமைதியான வாழ்க்கையை விரும்புகின்றன, யானைகள் தங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை ஏளனம் செய்யும் மனிதர்களை, என்னை மன்னித்ததைப் போலவே மன்னித்து விடுகின்றன. அவற்றிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள உயரிய பண்புகள் பல இருக்கிறது. யானைகளை நான் நேசிக்கிறேன், யானைகளை எப்போதேனும் தெருவில் அல்லது கோவில்களில் பார்த்தால் அவற்றுக்கு நான் காசு கொடுப்பதில்லை, பழங்களை மட்டுமே வாங்கி அவற்றுக்குக் கொடுக்கிறேன், தலையை ஆட்டியபடி அவை அந்தப் பழங்களை ருசிப்பதை அளவற்ற மகிழ்வோடு எப்போதும் ரசிக்கிறேன், அவற்றின் அருகில் சென்று அவற்றை வருடிக் கொடுப்பதில் ஒரு இனம் புரியாத நெகிழ்ச்சியை நான் இப்போதும் உணர்கிறேன். அவற்றின் மீது அந்த இந்தோனேஷியக் குறும்படத்தில் வரும் குழந்தைகளைப் போலவே ஏறிச் சவாரி செய்ய வேண்டும் என்று ஏங்குகிறேன், அப்படி ஒரு வாழ்க்கை எனக்குக் கிடைக்காத குறையை அந்தத் திரைப்படம் எப்போதும் நிறைவு செய்யும், அந்தத் திரைப்படத்தில் வரும் சின்னக் குழந்தை யானைக்குக் கட்டி விடும் மணியின் ஓசை என் செவிப்பறைகளில் இருந்து எதிரொலித்து இந்தப் பேரண்டமெங்கும் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment